நாடோடிகள் படம் சிறப்பாக வந்திருப்பதாக வலை பக்கங்களில் தொடர்ந்து விமர்சனங்கள்.. அச்சு ஊடகங்களிலும் அதன்படியே ஒரு நல்ல கண்ணோட்டம் இருந்ததால் தவறவிடாமல் பார்த்தாகி விட்டது... ஆனால்
மதிப்பிற்குரிய அண்ணன் அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களின் இந்த வலைப்பூவில் மட்டும் வித்தியாசமான பூ பூத்திருந்தது அதனை நுகர்ந்தத்கால் எழுந்த எண்ணங்களை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அன்பின் நண்பரே... கதை, சினிமா, கவிதை, பாடல், காட்சி, ஆடல், சோகம், சுகம், ஆனந்தம், பேரானந்தம், விமர்சனம் அது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதன்மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை ஆனால் உங்கள் இந்த விமர்சனத்தில் உள்ள கருத்துக்களை நான் மறுக்கிறேன், மறுக்கிறேன், மறுக்கிறேன்.
அரசுப் பணியில் சேர்ந்தால் மட்டுமே மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் சசிக்குமார், பி.ஏ.. அவன் மீது வெறித்தனமாக காதலில் இருக்கும் மாமன் மகள் அனன்யா.
கணிணி மையம் ஆரம்பிக்கும் முயற்சி செய்து கொண்டே, சசியின் தங்கையை காதலித்துக்கொண்டிருக்கும் சசியின் நண்பன் விஜய்.
வெளிநாட்டில் வேலைக்குப் போக விரும்பும் மற்றொரு நண்பன் பரணி.
இவர்கள் மூவரும் சசிக்குமாருடன் படித்த வகுப்புதோழன் சரவணன் காதலை நிறைவேற்றப் போராடி உதவி உடல், மன ரீதியான இழப்புக்குப் ஆளாகிறார்கள்.
பிறகு, அந்த காதலர்கள் பிரிந்ததைக் கேட்டு கொந்தளித்து அவர்களை சேர வற்புறுத்துகிறார்கள்.
படம் முடிந்து விடுகிறது.
-பொன்.வாசுதேவன்.மேற்கூறியதில் நீங்கள் குறிப்பு முகமாக குறிப்பிட்டிருந்தால், குறிப்பிட்டு கூற என்னிடம் ஒன்றும் இல்லை.
விரக்தியாக இருந்தால்....??? நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்ன எதிர்பார்த்து சென்றீர்கள்?
இது போல் நீங்கள் எங்குமே கண்டதில்லையா...? அல்லது இதெல்லாம் ஒரு கரு...??? தேவையா இதற்க்கு ஒரு உரு...??? இதனை ரசிப்பவன் வெட்டியாய் நிற்கும் தரு. என்றே முடிவு கட்டி விட்டீர்களா? அப்படியெனில், இல்லை, இல்லை, நான் தொடுத்து நிற்பேன் ஒரு செறு.
சில முயற்சிகளை பாராட்டி, பல நிகழ்வுகளை தொகுத்து அருமையான வார்த்தைகளால் அறைந்து, கூறி இருக்குறீர்கள். நன்றி. நன்றி. நன்றி.
அவர்களது புது முயற்சிகளையும் வெற்றிகளையும் பாராட்டி கூறிவிட்டு, அவர்களை அடுத்து சாடுவது ஏன்? யாவருமே வாழ்க்கை ஓட்டத்தில் ஒன்றை பிடிக்க ஓடி, மற்றதை பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் குரங்கு மனம் கொண்டவர்கள் தான்.
அதற்கு பின் ஆசை யாரை விட்டது என்றொரு கேலி வேறு... அவரது முயற்சி அது, அதனை நாம் ஏன் பகடி செய்ய வேண்டும்? யாருக்கில்லை ஆசை???
மிகவும் சராசரி இயக்குநரின் மனோபாவத்தில் எடுக்கப்பட்ட படம். உண்மை தான். சாதாரண மக்களின் உணர்வையும் எண்ணங்களையும் சொல்லும் விதம் எடுக்கப்பட்ட படம் மிக சாதாரணமாகவே இருக்கும், இருக்கிறது. இதில் அசாதாரணமாக எவ்வாறு சிந்திப்பது? நீங்கள் கொஞ்சம் கோடிட்டு கொடுத்தால் மிக புண்ணியமாக போகும் உங்களுக்கு, உங்களால் நாங்களும் முதிர்ச்சி பெற முயலுவோம், புது முயற்சிகளும் வளர்ச்சி பெற ஏதுவாகும். அதற்காக பிடியுங்கள் நன்றிகள் பல, முன்னே.
நீங்கள் சொல்லும் சார்பு தத்துவமும் எல்லா விடயங்களுக்கும் பொருந்தும். ஒப்பீடு இல்லையெனில் வாழ்வே சுவையற்று போகும், சுறுசுறுப்பும் குன்றி போகும்.
அடுத்து நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்,
மிக மோசமான கதையமைப்பு, அடுத்து பாடல் வரும், சண்டை வரும், வில்லனிடம் மாட்டிக்கொள்வார்கள் என்று சராசரி ரசிகன் கூட கண்டுபிடித்துவிடும் விதமாக அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள், நகைச்சுவை என்ற பெயரில் படம் முழுவதும் எல்லா காட்சியிலும் ஒரு வசனம், கஞ்சா கருப்பு செய்யும் சகிக்க முடியாத நகைச்சுவை, உடலிச்சையை காதல் என்று நண்பன் சொல்லித்திரிவதைக்கூட கண்டறியாத, காதலில் பிரிய வசதியாக வாழ்ந்த சூழ்நிலையும், பொருளாதார சிக்கலும்தான் காரணம் என்பதைக்கூட உணர இயலாத மனமுதிர்ச்சியற்ற கதாநாயகன் சசிக்குமார் இவையெல்லாம் திரைப்படத்தை பலவீனப் படுத்துகின்றன.இயல்பாக இருக்க பலமுறை முயற்சித்து, அனைவருமே நன்றாக ‘நடித்தி‘ருக்கிறார்கள்.
-பொன்.வாசுதேவன்நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும், அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் சில சம்பவங்கள் எல்லார் வாழ்க்கையிலும் நடந்திருக்கும், நடந்து கொண்டிருக்கும், நடக்கும். அந்த சம்பவங்களை கோர்த்து ரசனையாக சொல்வதே, ஒரு படைப்பாளியின் வெற்றி. அந்த வகையில் அவர் செய்திருப்பது பாராட்ட தகுந்த ஒன்றே. இதில் நீங்கள் குறை கூறுவது ஏன்? என்பது அந்த பதிவாண்டவருக்கே வெளிச்சம்.
ஒரு சொல்லை வைத்து காமடி செய்வதற்கு திறன் வேண்டும். உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றால் தவறில்லை. "டாம் அண்ட் ஜெர்ரி" பார்த்து உங்களுக்கு சிரிப்பு வராது ஆனால் எங்களுக்கு வரும்.
கதையில் காதலை சொல்ல எத்தனிக்கும் யாவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்பது சொல்பவருக்கும் தெரியும், கேட்பவருக்கும் தெரியும். இருப்பினும் காதல் இன்றும் பேசு பொருள் ஆகும்.
அடுத்து, உடல் இச்சை என்றால் அதை தீர்க்க வழி இல்லாத சூழலில் இருந்து அவரது நண்பர் வரவில்லை. இருப்பினும் வந்திருக்கிறான் என்றால் அது உண்மை காதலாகவே இருக்கும் என்றே யாவரும் எண்ணுவர். இருப்பினும் நண்பனின் காதலை உயர்வாகவே என்னும் பாரம்பரியம் நம்முடையது... கல்லூரியில் கூட நண்பனின் காதலியை பற்றி கேலி கிண்டல் செய்து வருவர், காதலிக்க ஆரம்பித்த பிறகு அந்த பேச்சுக்கள் குறைவதை நாம் கண்டதில்லையா?
சரி உங்கள் வாதத்திற்கே வந்தாலும், மன முதிர்ச்சி இல்லாத கதாநாயகன் இருக்கவே கூடாதா? கதாநாயகன் என்றால் எல்லா சித்து வேலைகளும் கைவந்தவனாகவும், ஏய்... ஊய்... ஆய் வசனங்களை பேசுபவனாக எதிர் பார்குறீர்களோ?
அவர்கள் சினிமாவில் நடிக்க முயற்சித்திருக்கிறார்கள் அது பாராட்டப்பட வேண்டியது... ஏன் என்றால் தற்கால திரை சூழலில் யாரும் அப்படி பட்ட முயற்சி எடுக்கவில்லை ஒரு சிலரை தவிர, ஆனால் நீங்கள் செய்திருக்கும் இந்த முயற்சி பாராட்ட தக்கதல்ல.
மாமன் மகளின் அளவில்லா நேசம், நண்பர்களின் நெருக்கம், பெற்றவர்களின் ஆதரவு என மனநெகிழ்வளிக்கக்கூடிய காட்சிகளை வைத்து மட்டுமே படத்தை ஓட்டி விடலாம் என்று நினைத்திருக்கிறார் சமுத்திரக்கனி. பக்கம் பக்கமாய் அறிவுரை கூறுகிறார் சசிக்குமார். விரைவில் இவரது குரலையும் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு என அரைத்து தோசை வார்ப்பார்கள் என்பது நிச்சயம். டி.ராஜேந்தரை சின்னதாக மினியேச்சர் பண்ணது போலவே அவரை நினைவூட்டுகிறார் சசி. என்ன பற்களைக் கடிப்பதில்லை.
- பொன்.வாசுதேவன்நீங்கள் சொன்ன கூறுகள் அனைத்தும் இருக்கிறது, ஆனால் உங்கள் பார்வை சற்றே விலகி போய் விட்டது. இந்த படத்தில் அவர், (சமுத்திரக்கனி) எங்கேயும் நீங்கள் சொன்ன அந்த விடயங்களை சார்ந்து இல்லை. மாமன் மகள் பெரிய வசனங்களும் சொல்ல வில்லை, மணந்தால் மகாதேவன் இல்லை மரண தேவன் என்றும் முட்டாள்தனமாக சிந்திக்க வில்லை. நடந்தது எதார்த்தம், அதனால் தான் வெற்றி தேடி வந்திருக்கிறது அந்த படத்திற்கு.
அந்த அசத்தபோவது யாரு, கலக்க போவது யாரு அவர்களை விடுங்கள்...இதோ நீங்களே ஆரம்பித்து விட்டீர்களே... நன்றி. இது தான் எங்களுக்கும் வேண்டும்.
படத்தின் தேவையற்ற இரைச்சல், வாகன உபயோகம், காலம்காலமாக பழக்கத்திலிருக்கும் கதை சொல்லும் உத்தி, வில்லன் வீட்டுக்குள் நாய் இருப்பது, நகைச்சுவை என்ற பெயரில் கழுத்தறுப்பது, முக்கியமான வேலையாகச் செல்லும் வழியில் சாலையில் நின்றிருக்கும் எவளோ ஒருத்திக்கு வாகனத்தில் இடம் கொடுத்து, அவளுடன் மது அருந்தி நடனம் ஆடுவது, கதாநாயகனின் நண்பர்களுக்கு மட்டும் உடல் உறுப்பு இழப்பு, காது செயலிழப்பு, அதை வைத்து நகைச்சுவை, கதாநாயகனின் பாட்டியை சாகடித்து அனுதாபம் பெற முயல்வது என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை சமுத்திரக்கனி.
வசந்த ராகம், ரயில் பயணங்களில், ஒருதலை ராகம், பாலைவனச் சோலை காலத்துக்கதையை சற்றே நவீனப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். காதலை பிரதான மூலதனமாக கொண்டு இயங்கிவரும் தமிழ் திரைப்படச் சூழலில் எதையெதையோ சொல்லி சலித்துப் போய் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புளித்துப்போன திரைக்கதைதான் நாடோடிகள் திரைப்படம். 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால், 500 நாட்கள் வரை ஓடியிருக்கும்..
-பொன்.வாசுதேவன்
ஒரு சின்ன விஷயம், குறை கூறுவது என்று முடிவு எடுத்து விட்டால், எதனையும் குறை கூறலாம். அந்த மனோபாவத்தில் தான் நீங்களும் இதனை எழுதி இருக்குறீர்கள். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் சேவை.
மாற்று சிந்தனையை எங்கள் மனதில் விதைத்து செல்லுங்கள் அத்தனை நாங்கள் வரவேற்கிறோம். எங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தால் உங்களை எங்கள் குருவாகவும் ஏற்று கொள்கிறோம். ஆனால் இது போல் எதோ எழுதவேனும் என்று எழுதி எங்களை.......................
இப்போதும் அந்த படம் வெற்றிப்படம் தான் சார்....
இது ஒரு முதிர்ச்சியான பதிவாக இல்லாது இருக்கலாம், வாள்வீச தெரிந்த உங்களுக்கு எதிரே, கல்வீச மட்டுமே தெரிந்த என்னோட கல்லாய் இருக்கட்டும், சிறு கல்லாய் இருக்கட்டும், நன்றி.